ஞாயிறு, 31 மார்ச், 2013

ஹரிதாஸ்

உலகில் எல்லா மனிதர்களும் ஏதோ ஒரு வகையில் குறைபாடு உள்ளவர்கள்தான். ஆட்டிசம் என்பது ஒரு வியாதி அல்ல ஒரு குறைபாடு மட்டுமே, அவர்களும் நம்மைப்போல சாதாரண மனிதர்கள்தான் என்ற கருத்தை என்கவுண்டர் செண்டிமெண்ட் நகைச்சுவை குத்துப்பாட்டு என்று கலந்து கட்டி அடித்திருக்கிறார்கள்.

எவ்வளவு நல்ல கருத்தைச் சொல்லும் படமாக இருந்தாலும் ஜனரஞ்சக முறையில் சொல்லப்படவில்லையென்றால் கவனிக்கப்படாமலே போய்விடக்கூடிய அபாயத்தை தவிர்த்திருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். முதலில் படம் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தைத்தூண்டியது. அந்த ஆர்வத்தை கடைசி வரை கெடுக்காமல் காப்பாற்றியது. இவையே படத்தின் வெற்றிக்கு காரணங்கள். ​

கிஷோர் - அந்த போலீஸ் மிடுக்கும், பையனை புரிந்துகொள்ள முடியாமல் படும் அவஸ்தையும், பையனைக்காணவில்லையென்றதும் படும் வேதனையும் மிகச்சிறப்பு. ​

ஸ்நேகா - ஆசிரியையாக பாந்தமான நடிப்பு. ​ பையன் - பெயர் தெரியவில்லை. உண்மையில் ஆட்டிசம் உள்ள இந்திய சிறுவர்களை வெகு குறைவாகத்தான் பார்த்திருக்கிறேன். அப்படி பார்த்த வரையில் அவர்களது முகமே சற்று வித்தியாசமாக இருக்கும். அது இந்த பையனிடம் பார்க்க முடியவில்லை. மற்றபடி ஓகே. அஞ்சலி யில் ஷாமிலி க்கு ஆட்டிசமா? சந்தேகம்.

இசை - பாடல்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை. ஆனால் பின்னணி இசை காட்சிக்குத் தேவையான உணர்வுகளைக் கொடுக்கிறது.

இயக்கம் - எந்த இடத்திலும் தொய்வடையாத திரைக்கதையால் நல்ல பொழுதுபோக்காகவும் பரபரப்பாகவும் இருக்கிறது.

குடும்பத்தோடு ஒரு முறையாவது கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம்.

வெள்ளி, 8 மார்ச், 2013

தாயுமானவன் - பாலகுமாரன்

ஒரு ஆண் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியம், அதை விட ஒரு வீட்டில் ஒரு ஆண் சம்பாதிக்க முடியாத நிலையில் அந்த வீட்டுப் பெண் சம்பாரிப்பதால் எவ்வளவு பிரச்சினைகள் என்பதை பரமு என்ற நடுத்தர மனநிலை ஆணின் மனதின் வழியாக விவரிக்கிறது 'தாயுமானவன் '
பரமு ஒரு கார் உற்பத்தி தொழிற்சாலை யில் வேலை பார்க்கும் தொழிலாளி மற்றும் தொழிற்சங்கத் தலைவன் . தொழிலாளிகளின் பிரச்சினைகளை நிர்வாகத்தோடு பேசி சுமூகமாகத் தீர்ப்பதில் வல்லவன். இதனால் இரு தரப்பினரிடமும் நல்ல பெயர் வாங்கிய புத்திசாலி. அன்பான அனுசரணை யான மனைவி,  பாசத்தைப்பொழியும் மகள் , மகன். அவர்களோடு தினந்தோறும் கழியும் மாலை வேளைகள், வார இறுதி என்று இருக்கும் ஒரு நடுத்தர குடும்பஸ்தன்.
நிர்வாகத்தின் கவனக்கோளாறால் ஏற்படும் ஒரு பிரச்சினை யை சரி செய்ய அவன் எடுக்கும் ஒரு முடிவால் ஏற்படும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் அவனைத்தூக்கி கொண்டாடிய தொழிலாளர் களையும் நிர்வாகத்தையும் விட்டுக்கொடுக்க முடியாமல் பிரச்சினை க்கு தானே வலிய பொறுப்பேற்று வேலையை விட்டு விடுகிறான்.
அதிலிருந்து ஏறக்குறைய ஒரு வருடம் கழித்து அவனுக்கு பம்பாயில் வேலை கிடைத்து போகும் வரை பரமனின் நிலையிலிருந்து சொல்லியிருக்கிறார் பாலகுமாரன். பக்கத்து வீட்டு பாலியல் பிரச்சனைகள், மகள் பருவம் எய்தியிருக்கும் சூழ்நிலையில் அனைவரும் பெண்ணின் தாயை மட்டுமே தேடுவதிலிருந்து, பல்வேறு சூழ்நிலைகள் நேரில் பார்த்தது போலவே இருக்கிறது.
நிச்சயம் படிக்கவேண்டிய ஒரு நாவல்.

Special 26 (Hindi)


சாண்டாக்ளாரா - ல ஏ எம் சி மெர்காடோ என்று ஒரு 20 தியேட்டர் காம்ப்ளக்ஸ். அதுல இப்பல்லாம் 2,3 இந்தி, தெலுங்கு படங்களாவது ஓடுது. $6 க்கு (தினமும் மதியம் 12 மணிக்குள்ள) நல்ல தியேட்டர்ல நல்ல சவுண்ட் சிஸ்டத்தில, கூட்டமே இல்லாம படம் பார்க்கலாம் (மொத்தமே 4 பேர்தான் இருந்தோம்). அங்கதான் இந்த படம் பார்த்தேன்.



உண்மைக்கதை என்று சொல்லாவிட்டால் கொஞ்சம் கூட நம்ப முடியாத கதை. 1980 களில் சிபிஐ என்று சொல்லி மத்திய அமைச்சர், பிரபல நகைக்கடை என்று ஏறத்தாழ 50 இடங்களில் கொள்ளையடிக்கிறது ஒரு கும்பல். அதுவும் நான்கே பேர். நிகழ்ச்சிகள் எல்லாமே உண்மையா அல்லது ஒரு வரி செய்தியை வைத்து கதையா என்று தெரியவில்லை. அதிலும் பிரபலமான ஒரு ஓட்டலில் சிபிஐ க்கு ஆள் எடுப்பதாக நேர்முகத்தேர்வு எடுப்பதெல்லாம் எப்படி நடந்திருக்குமோ தெரியவில்லை. ஆனாலும் சினிமாவைப் பொறுத்த வரை ரொம்ப ஆராயாமல், இப்படி நடந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று நினைத்து பார்த்தால் விறுவிறுப்புக்கு கியாரண்டி.



அக்சய்குமார், அனுபம் கெர் அப்புறம் 2 பேர் (பெயர் தெரியவில்லை) அவ்வளவுதான் டீம். அது போக கதாநாயகி என்று பேருக்கு அழுவாச்சி காஜல் அகர்வால், ஏமாந்த போலீஸ் ஒருவர், ஒரு பெண் போலீஸ், நிஜ சிபிஐ ஆபீசராக மனோஜ் பாஜ்பாய் மற்றும் அவரது உதவியாளர். அக்சய் குமார் இதில் செம ஹாண்ட்சம். அனுபம் கெர் எனக்கு இந்தி படம் தெரிய ஆரம்பித்ததில் இருந்து அப்படியே இருக்கிறார். இருவரும் ரோலுக்கு சரியான பொறுத்தம். அதிலும் அனுபம் கெர் சிபிஐ அதிகாரியாக காட்டும் மிடுக்கும், கும்பஸ்தனாக சாமானியனாகவும் நல்ல மாற்றம்.



இசை : ஒரு பாடலும் கேட்கிற மாதிரி இல்லை. படம் பூராவும் லூப்பில் போட்டுவிட்ட மாதிரி ஒரே மாதிரியான பின்னணி இசை.

சில இடங்களில் சுவாரசியமான வசனங்கள் (அனுபம் கெர் தனது குடும்பத்தை அறிமுகப்படுத்தும்போது -- அவ்வளவுதானா? - அக்சய் குமார். என்னப்பா செய்யிறது, வீட்டுல டிவி இல்லையே! - அனுபம் கெர்).

இந்தி படங்கள்ல தமிழன காட்டுனா ஒண்ணு அவன் தயிர் சாதம், சாம்பார் சாதம் சாப்பிடுறவனா இருப்பான். இதுல பாட்ஷா வசனம் பேசுகிறான்.

கிளைமாக்ஸ் ல இதுதான் நடக்கப்போகுதுன்னு தெரிஞ்சாலும் அது நடக்கும் விதம் சுவாரஸ்யம்.

அவ்வளவு பணத்தையும் என்ன செய்யிறாங்கன்னே தெரியல. எல்லாரும் வழக்கம் போலத்தான் இருக்காங்க. சரி உண்மையில என்ன நடந்ததுன்னு இயக்குநருக்குத் தெரியாதுன்னு வச்சுக்கலாம்.


கொசுறு: இந்த சினிமா காம்ப்ளக்ஸ் ல 'தந்தூரி அவன்' ரெஸ்டாரெண்ட் ஒண்ணு இருக்குது. அங்க 'சாக் சிக்கன்' வித் நான் -- சூப்பரா இருக்கு!